இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கிடைக்கும்: அசோகன் எம்எல்ஏ உறுதி

 

சிவகாசி, ஏப்.10: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு அரசு வழங்கும் தொகையுடன் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரம் கிடைக்கும் என அசோகன் எம்எல்ஏ தெரிவித்தார். விருதுநகர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு கடந்த ஒரு வாரமாக சிவகாசி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சிவகாசி மண்டல பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிரசாரத்தின் போது அசோகன் எம்.எல்.ஏ. கூறும்போது, கடந்த பத்தாண்டு கால தேஜகூட்டணி ஆட்சியில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நாடு முழுவதும் மூன்றரை கோடி பணியிடங்கள் இன்னும் நிரப்பாமல் வைத்துள்ளனர். கை சின்னத்துக்கு போடுகிற ஓட்டு மோடிக்கு வைக்கிற வேட்டு.

18வது மக்களவை தேர்தலில் நாட்டிற்கு தேவை ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது. சர்வாதிகாரத்தை வீழ்த்த வேண்டும், ஜனநாயகம் காக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் இந்த தேர்தல். அதனால் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மோடியின் மோசமான ஆட்சியால், மோசமான சட்ட திட்டங்களால் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இனிமேல் மோடி வந்தால் நாடு நாடாக இருக்காது, ஜனநாயகம் இருக்காது.

திமுக ஆட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இல்லம்தோறும் கல்வி, மக்களைத்தேடி மருத்துவம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் மிகப்பெரிய பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுப்போம் என்று கூறியுள்ளனர். தமிழ்நாடு அரசு வழங்கும் தொகையுடன் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரம் கிடைக்கும் என்றார்.

The post இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கிடைக்கும்: அசோகன் எம்எல்ஏ உறுதி appeared first on Dinakaran.

Related Stories: