காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் உள்ளதாக மோடி அவதூறு : இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்!!

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடியின் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது. இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த வாரம் காங்கிரஸ் தலைமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன. இந்த நிலையில் ராஜஸ்தானின் அஜ்மீரில் நடந்த பாஜக பேரணியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள விஷயங்கள் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்து முஸ்லிம் லீக்கின் சிந்தனைகளை ஒத்திருப்பதாக விமர்சித்தார்.பிரதமர் மோடி இவ்வாறு பேசியதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக மோடி கூறிய விமர்சனத்திற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில்,”பிரதமரின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது. முஸ்லீம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார். மத அரசியலை முன்வைத்து நாட்டில் பிளவுவாதத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இவ்வாறு மோடி பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி ராணுவத்தை பயன்படுத்தி வருகிறார் என்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிரதமருக்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் உள்ளதாக மோடி அவதூறு : இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்!! appeared first on Dinakaran.

Related Stories: