பிரித்தாளும் சூழ்ச்சிதான் பாஜவின் ராஜதந்திரம்: கவிஞர் காசி முத்துமாணிக்கம் திமுக வர்த்தகர் அணி செயலாளர்

1 பாஜவினர் தேர்தல் ராஜதந்திரம் என்று எதை சொல்வீர்கள்?
எதிர்கட்சியாக இருக்கும் போது தங்கள் தேவையை தேசபக்தி என்பார்கள். ஆனால் ஆளும் கட்சியாகவிட்டால், இலங்கை கடற்படை நமது மீனவர்களை சுட்டாலும் கண்டு கொள்ளமாட்டார்கள். சீனர்கள் அருணாச்சலபிரதேசத்தில் வீடு கட்டினாலும் கண்டும் காணாமல் தூங்குவதே இவர்களின் ராஜதந்திரங்களில் ஒன்று. சிறுபான்மையினரை எதிர்த்து அவர்கள் பக்கத்தில் போகமாட்டார்கள். ஆனால் 80 சதவீத மக்களின் உணர்வுகளை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுவது இவர்களின் மற்றொரு ராஜதந்திரம். இவர்களின் சூழ்ச்சியால் சகோதரத்துவத்துடன் வாழும் நம் நாட்டில் ஒருவருக்கொருவர் அடித்து கொள்ளும் நிலை உருவாகிறது. அதை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

2 சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஒரு இடத்தில் கூட இடம்பெறாத தேமுதிக, தமாகா, அமமுக போன்ற கட்சிகளுக்கு பழைய சின்னத்தையே தேர்தல் ஆணையம் தந்துள்ளது. ஆனால் 2 நாடாளுமன்ற உறுப்பினர், 4 சட்டமன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, தான் நின்று வென்ற பானை சின்னத்தில் மீண்டும் நிற்க வாய்ப்பு தரவில்லை. எதிர்ப்பு இல்லாமல் ஸ்குரூட்டினியில் தானாக தான் கிடைத்தது. தமிழகத்தில் யாரை கேட்டாலும் பம்பரம் சின்னம் மதிமுக சின்னம் என்பார்கள். ஆனால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் தரவில்லை. இதெல்லாம் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பது போன்ற சர்வாதிகார ஆட்சியை போன்று உள்ளது.

3 தமிழகத்தில் தேர்தல் முடிவு எதை காட்டும் என நினைக்கிறீர்கள்?
யானைக்கும் அடிசறுக்கும் என்பது பழைய விதி. பூனைக்கும் அடிசறுக்கும் என்பது புதிய விதி. எதிர்கால இந்திய ஆட்சி பீடத்தில் இந்தியா கூட்டணி வந்தாலும் சரி. பாஜ கூட்டணி வந்தாலும் சரி. சேதாரம் என்னவோ எடப்பாடி பழனிச்சாமிக்கும், அதிமுகவுக்கும் தான்.

4 மூன்றாம் மனிதரிடமா காலில் விழுந்தேன், மூத்தோரிடம் தானே காலில் விழுந்தேன் என்கிறாரே எடப்பாடி பழனிச்சாமி?
அப்படி விளக்கம் அளிப்பவர், சசிகலா கணவர் நடராஜன் சாவுக்கு ஏன் போகவில்லையாம். இன்று வரை துக்கம் கேட்க போகாதது ஏன்? சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா என்ன மூன்றாம் நபரா? ஏன் இதுவரை எடப்பாடி பழனிச்சாமி கூட்டம் அவரை பார்க்க செல்லவில்லை.

The post பிரித்தாளும் சூழ்ச்சிதான் பாஜவின் ராஜதந்திரம்: கவிஞர் காசி முத்துமாணிக்கம் திமுக வர்த்தகர் அணி செயலாளர் appeared first on Dinakaran.

Related Stories: