மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி நிறைவு: 12,500 டன் சர்க்கரை உற்பத்தி

மதுராந்தகம்: மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த பருவ ஆண்டுக்கான கரும்பு அரவை நிறைவு பெற்றது. இதில், 12,500 டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என சர்க்கரைஅதிகாரிகள் தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், படாளத்தில் இயங்கி வரும் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மிகவும் பழமையானது. இந்த ஆலையில் கரும்பு அரவை கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி தொடங்கியது.

இந்த ஆலைக்கு மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பல தாலுகாவில் இருந்து பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு ஆண்டுதோறும் அரவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2023 – 24ம் ஆண்டு பருவ காலத்தில், சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பு, இந்த ஆலையில் அரவை செய்யப்பட்டுள்ளது. அதன் மூலமாக சுமார் 12,500 டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த பருவ ஆண்டில் 2 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய ஆலை நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரும்பு பயிரில் நோய் தாக்குதல், காட்டுப் பன்றிகளால் கரும்புகள் சேதப்படுத்தப்படுவது மற்றும் இயற்கை இடர்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது என சர்க்கரை ஆலை அதிகாரிகள் தெரிவித்தனர். எதிர்வரும் பருவ ஆண்டுக்கான அரவை வரும் டிசம்பர் மாதம் தொடங்கப்படும். அந்த வகையில் கரும்பு பயிரை செவ்வனவே செய்ய நடவடிக்கை எடுப்போம் என கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.

The post மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி நிறைவு: 12,500 டன் சர்க்கரை உற்பத்தி appeared first on Dinakaran.

Related Stories: