பாஜவை தோற்கடிக்க களமிறங்கும் விவசாயிகள்

சண்டிகர்: மக்களவை தேர்தலில் பாஜவை தோற்டிக்க பஞ்சாப்பில் சம்யுக்கதா கிசான் மோர்ச்சா எனும் விவசாயிகள் அமைப்பு பிரசாரம், பேரணியில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020ல் டெல்லியில் நடந்த மாபெரும் விவசாயிகள் போராட்டத்தை சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய அமைப்பு தலைமை தாங்கி நடத்தியது. தற்போது இந்த அமைப்பு பஞ்சாப்பில் பாஜவை வீழ்த்த களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் பல்பீர் சிங் ரஜேவால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த மாதம் 14ம் தேதி நடைபெற்ற கிசான் மஸ்தூர் மகாபஞ்சாத்தின் போது பாஜவை எதிர்த்து பிரசாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, விவசாயிகளின் கோரிக்கைகள் வலியுறுத்தி பஞ்சாப்பின் ஜாக்ரோனில் வரும் மே 21ம் தேதி விவசாயிகள் பேரணி நடத்தப்படும். அதில் ‘பாஜவை தோற்கடிப்போம், கார்ப்பரேட்களை துரத்துவோம்’ என்பதே எங்களின் முழக்கமாக இருக்கும்.

மேலும், பஞ்சாப்பில் பாஜ வேட்பாளர்களை தோற்கடிக்க, கடந்த 10 ஆண்டு பாஜ ஆட்சியின் தோல்விகள் அடங்கிய துண்டுபிரசுரம் அச்சடித்து பொதுமக்களுக்கு வழங்குவோம். மேலும், மக்களவை தேர்தலில் பாஜவை தண்டிக்க வேண்டுமெனவும், சிறந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் மக்களை வலியுறுத்துவோம். நாங்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை. பாஜவை தோற்கடிப்பது மட்டுமே ஒரே குறிக்கோள்’’ என்றார். பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

The post பாஜவை தோற்கடிக்க களமிறங்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Related Stories: