வாக்காளர் விழிப்புணர்வு மகளிர் பேரணி குன்னம் பஸ் நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிக்ககோரி குறும்படம் ஒளிபரப்பு

குன்னம், ஏப் .4: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 19.4.2024 அன்று நடைபெறவுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள், நகராட்சி, பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டி குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதன்படி குன்னம் பேருந்து நிலையத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிக்ககோரி குறும்படம் ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல் பால்பண்ணை பகுதிகளிலும், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது. தினந்தோறும் இந்த விழிப்புணர்வு குறும்படங்களை பொதுமக்கள் பார்வையிட்டு பயன்பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் முடியும் வரை இந்த விழிப்புணர்வு குறும்படங்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் தொடர்ந்து திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வாக்காளர் விழிப்புணர்வு மகளிர் பேரணி குன்னம் பஸ் நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிக்ககோரி குறும்படம் ஒளிபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: