நான் என்ற அகங்காரத்தை விட்டு விட்டு அனைவரிடமும் எளிமையாக பழகுங்கள்; நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை

சென்னை: சென்னை, கௌரிவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 12ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் கே.லோகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் வி.எஸ்.மகாலட்சுமி, துணைத் தலைவர் எல்.நவீன்பிரசாத், இயக்குனர் பேராசிரியர் ஏ.சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர். முதல்வர் டி.சரவணன் வரவேற்றார்.

விழாவில் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன், தமிழக அரசின் கல்லூரி கல்வி சென்னை மண்டல இணை இயக்குநர் டாக்டர் ஆர்.ராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், அண்ணா பல்கலைக்கழக அளவில் ரேங்க் எடுத்த 7 துறைகளை சார்ந்த 14 மாணவர்களுக்கு ரொக்க பரிசுகள், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களையும் வழங்கி பாராட்டினர்.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பேசும்போது, ‘மாணவர்கள் பட்டம் பெறுவது வாழ்க்கையின் முதல் படி. அதற்கு பிறகுதான் உங்கள் வாழ்க்கை துவங்குகிறது. இனிதான் நீங்கள் அதிகம் கற்று தெரிந்து கொள்ள வேண்டும். கற்பது என்பது வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டிய ஒரு செயல். உங்களுக்கான சவால்களை நீங்கள் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். உயரிய சிந்தனைகளை இலக்காக வைத்து உங்கள் லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். கல்வியுடன் சிறந்த பண்புகள்தான் உங்களுக்கான வாய்ப்புகளை பெற்று தரும். எனவே, நான் என்னும் அகங்காரத்தை விட்டுவிட்டு அனைவரிடத்திலும் எளிமையாக பழகுங்கள்.

அப்போதுதான் நீங்கள் மற்றவர்களிடம் இருந்து பல நல்ல விஷயங்களை கற்று தெரிந்து கொள்ள முடியும். வளர்ச்சி என்று சொல்லி நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை புறந்தள்ளாமல் கடைபிடிக்க வேண்டும். வாழ்வில் எந்த உயரிய இடங்களை நீங்கள் அடைந்தாலும், உங்கள் பெற்றோரையும், நம் தேசத்தையும் ஒருபோதும் மறந்து விடக்கூடாது’ என்றார். இதில் மாநில கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் எஸ்.ரகு, வி.எஸ்.ஜெயபிரகாஷ், கே.பார்த்தசாரதி, அருண் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் தலைவர் டாக்டர் ஜி.துர்காதேவி நன்றி கூறினார்.

The post நான் என்ற அகங்காரத்தை விட்டு விட்டு அனைவரிடமும் எளிமையாக பழகுங்கள்; நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: