என்னை வெற்றி பெற செய்தால் வடசென்னை பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன்: திருவிக நகர் பிரசாரத்தில் ராயபுரம் மனோ உறுதி

தண்டையார்பேட்டை: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோ நேற்று திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட 71, 74 ஆகிய வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குளக்கரை சாலை, சந்திர யோகி சமாதி, அம்பேத்கர் சிலை, ஸ்டேட் பேங்க் ஆப் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் உடன் சென்று துணி தைத்து கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் அதிமுக கடந்த காலத்தில் செய்தது குறித்து அந்த பகுதி மக்களிடையே கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது ராயபுரம் ஆர்.மனோ பேசும்போது, ‘‘இந்த பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்வேன். போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். டோபிகானா மக்களுக்கு நவீன முறையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன். மண்பாண்ட பொருட்கள் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மானியம் வழங்க ஏற்பாடு செய்வேன். ஓட்டேரி புளியந்தோப்பு பகுதி மக்களின் முக்கிய பிரச்னைகளை தீர்த்து வைப்பேன்.

ஆடுதொட்டி நவீனப்படுத்தப்பட்டு இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ வசதி வழங்க ஏற்பாடு செய்வேன். என்னை வெற்றி பெற செய்தால், வடசென்னை மக்களின் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பேன்’’ என்றார். வாக்கு சேகரிப்பின் போது திருவிக நகர் பகுதி செயலாளர்கள் முகுந்தன் கோபால், பரமகுரு, வட்ட செயலாளர்கள் மணிவண்ணன், சந்திரசேகர், அறிவழகன், கோபிநாத், மற்றும் கேட்டரிங் ரமேஷ், எம்.ஆர்.சந்திரன், ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட அதிமுகவினர் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

The post என்னை வெற்றி பெற செய்தால் வடசென்னை பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன்: திருவிக நகர் பிரசாரத்தில் ராயபுரம் மனோ உறுதி appeared first on Dinakaran.

Related Stories: