அரசியல் சாசனத்தை மாற்றுவதே பாஜ நோக்கம்; பாஜ வேட்பாளர் சர்ச்சை பேச்சு.! காங். சரமாரி கேள்வி

புதுடெல்லி: அனந்த்குமார் ஹெக்டேவை தொடர்ந்து, பாஜ வேட்பாளர் ஜோதி மிர்தா, ‘அரசியல் சாசனத்தை மாற்றுவதே பாஜவின் நோக்கம்’ என வெளிப்படையாக பேசியிருப்பது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. சமீபத்தில் கர்நாடகா பாஜ எம்பி அனந்த்குமார் ஹெக்டே நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘மக்களைவ தேர்தலில் பாஜவுக்கு 3ல் 2 பங்கு பெரும்பான்மை வேண்டும். அப்போதுதான் அரசியல் சாசனத்தை மாற்ற முடியும்’’ என பேசியது சர்ச்சையானது. இந்த பேச்சால் அவருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சீட் தராமல் பாஜ ஒதுக்கியது. ஆனாலும், பாஜவின் உண்மையான திட்டம் அரசியல் சாசனத்தை மாற்றுவதுதான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் நாகூர் தொகுதி பாஜ வேட்பாளர் ஜோதி மிர்தா தேதி குறிப்பிடாத வீடியோ பதிவு ஒன்றில், ‘‘அரசியல் சாசனத்தை மாற்ற மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் பாஜவுக்கு பெரும்பான்மை பலம் வேண்டும்’’ என பேசியிருக்கிறார். இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், ‘‘இப்படி அனந்த்குமார் ஹெக்டே பேசியதால் அவருக்கு சீட் தராமல் பாஜ உட்கார வைத்தது. இப்போது இன்னொரு பாஜ வேட்பாளர் அக்கட்சியின் நோக்கத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். உண்மையை சொன்னதற்காக இன்னும் எத்தனை வேட்பாளர்களை பாஜ வாபஸ் பெற முடியும்’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

The post அரசியல் சாசனத்தை மாற்றுவதே பாஜ நோக்கம்; பாஜ வேட்பாளர் சர்ச்சை பேச்சு.! காங். சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: