அருணாச்சல் சட்டப்பேரவை தேர்தல் 10 பா.ஜ வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இட்டாநகர்: அருணாச்சலபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் பெமா காண்டு, துணைமுதல்வர் சவ்னா மெயின் உள்பட 10 பா.ஜ வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அருணாச்சலபிரதேச மாநிலத்தில் 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 2 மக்களவை தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக ஏப்.19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ ஆட்சி நடக்கிறது. முதல்வராக பெமா காண்டு உள்ளார். நேற்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது முதல்வர் பெமா காண்டு, துணை முதல்வர் சவ்னா மெயின் உள்பட 10 பா.ஜ வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தவாங் மாவட்டத்தில் உள்ள முக்டோ சட்டப்பேரவை தொகுதியில் முதல்வர் பெமா காண்டு மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தார்.

அருணாச்சலில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ வேட்பாளர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்து இருந்ததால் முதல்வர் பெமா காண்டு உள்பட 6 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். அதே நேரத்தில் சவுகாம் தொகுதியில் துணை முதல்வர் சவ்னா மெயின் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அவரை எதிர்த்து மனுத்தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் பயாம்சோ கிரி நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதே போல் மேலும் 3 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்றதால் அங்கு மனுத்தாக்கல் செய்த பா.ஜ வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 10 பா.ஜ வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

The post அருணாச்சல் சட்டப்பேரவை தேர்தல் 10 பா.ஜ வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: