மயாமி ஓபன் டென்னிஸ் பைனலில் ரோகன் – எப்டன்

மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில் விளையாட, இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.) இணை தகுதி பெற்றது. அரையிறுதியில் மார்செலோ கிராநோலர்ஸ் (ஸ்பெயின்) – ஹோரசியோ ஜெபல்லோஸ் (அர்ஜென்டீனா) இணையுடன் மோதிய போபண்ணா இணை 6-1, 6-4 என நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறியது. இப்போட்டி 53 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
இந்த வெற்றியால், ‘ஏடிபி 1000’ போட்டிகள் அனைத்திலும் பைனலுக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும் போபண்ணா நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் லியாண்டர் பயஸ் இந்த சாதனையை படைத்திருந்தார். இன்று நடைபெறும் பைனலில் இவான் டோடிக் (குரோஷியா) – ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) இணையுடன் போபண்ணா ஜோடி மோதுகிறது.

இதே தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் (20 வயது, 2வது ரேங்க்) 2-6, 4-6 என்ற நேர் செட்களில் பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவிடம் (32 வயது, 12வது ரேங்க்) தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் அமெரிக்காவின் டேனியலி கோலின்ஸ் 6-3, 6-2 என நேர் செட்களில் ரஷ்யாவின் எகதரினா அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினா 6-4, 0-6, 7-6 (7-2) என்ற செட்களில் பெலாரசின் விக்டோரியா அசரென்காவை வென்றார். பைனலில் ரைபாகினா – கோலின்ஸ் மோதுகின்றனர்.

The post மயாமி ஓபன் டென்னிஸ் பைனலில் ரோகன் – எப்டன் appeared first on Dinakaran.

Related Stories: