இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், கடந்த 2005ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய் கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். மேலும் போலி துப்பாக்கி உரிம வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்த அன்சாரி, ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் நேற்றிரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அன்சாரியின் மரணம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, மருத்துவமனைக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவரது கும்பலைச் சேர்ந்தவர்களால் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருதப்பட்டதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிரவு தொடங்கி விடிய விடிய போலீஸ் ரோந்து அதிகமாக இருந்தது. பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முக்தார் அன்சாரி மரணம் குறித்து அவரது மகன் உமர் அன்சாரி கூறுகையில், ‘எனது தந்தை சிறையில் இருந்த போது, அவருக்கு அளிக்கப்பட்ட உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டது. எனது தந்தையின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை சந்திக்க சென்றேன். ஆனால் என்னை அனுமதிக்கவில்லை. அவரது உடலை ஐந்து மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்தது’ என்றார்.
The post உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்த சிறையில் அடைக்கப்பட்ட பிரபல தாதா மரணம்: உணவில் விஷம் கலந்து கொன்றதாக மகன் புகார் appeared first on Dinakaran.