நேற்று காலை தேவாலயத்தை சுற்றி கிறிஸ்தவர்கள் பாடல் பாடி பவனியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சென்னை கதீட்ரல் பேராலயம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், பாரிமுனை, சூளை, பிராட்வே, வேப்பேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் குருத்தோலை பவனியும் அதனை தொடர்ந்து சிறப்பு ஆராதனையும் வெகு விமரிசையாக நடந்தது. காலை 6 மணிக்கு குறிப்பிட்ட இடங்களில் இருந்து ஊர்வலமாக குருத்தோலைகளுடன் சென்றனர். குருத்தோலைகளில் தென்னை, பனை சிலுவையின் அடையாளத்தை பல்வேறு வடிவங்களில் தயாரித்து கையில் பிடித்து சென்றனர். ஆலயத்தில் கொடுக்கப்பட்ட குருத்தோலைகளை வீடுகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைப்பது வழக்கம். அதன்படி குருத்தோலைகளை எடுத்து சென்றனர். குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து அடுத்த வாரம் முழுவதும் பெரிய வாரமாக அதாவது கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். இன்று முதல் புதன்கிழமை வரை சிறப்பு கன்வென்ஷன் கூட்டங்கள் ஆலயங்களில் நடைபெறும். அதைத் தொடர்ந்து 28ம் தேதி பெரிய வியாழன் அனுசரிக்கப்படும். 29ம்தேதி புனித வெள்ளி எனப்படும் பெரிய வெள்ளிக்கிழமை. அதனை தொடர்ந்து 31ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுதல் பண்டிகையான ஈஸ்டர் கொண்டாடப்படும்.
The post கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி சிறப்பு ஆராதனை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.