17 வயது சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வாலிபர்

ஓமலூர், மார்ச் 23: ஓமலூர் அருகே 17 வயது சிறுமி வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வாலிபர் மீது ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இரு தரப்பினர் நேருக்குநேர் காவல் நிலையத்தில் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த தாரமங்கலம் ஒன்றியத்தில் பவளத்தானூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிரஞ்சீவி என்ற வாலிபர், 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். பிறகு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், சிறுமியை மேச்சேரி பஸ் நிலையத்தில் விட்டுட்டு வாலிபர் சிரஞ்சீவி தப்பியோடி விட்டார். இதையடுத்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் அழைத்துவந்து, ஓமலூர் அருகேயுள்ள மகளிர் தங்கும் விடுதியில் சேர்த்தனர். இந்த நிலையில் வாலிபர் சிரஞ்சீவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, சிறுமியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால், வீடியோ வெளியிட்ட சிரஞ்சீவியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த சிரஞ்சீவியின் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது சிரஞ்சீவி உறவினர்களுடன் பெண் ஒருவர் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இரு தரப்பும் காவல் நிலையத்திலேயே ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்து கொண்டனர்.

வாலிபரை மறைத்து வைத்து கொண்டு சிறுமியின் வாழ்க்கையை கெடுப்பதாக, ஒரு தரப்பு வாக்குவாதம் செய்தனர். அப்போது போலீசாரிடம் ஒருதரப்பினர் கடும் வாக்குவாதம் செய்தது. சமூக வலைத்தளத்தில் சிறுமியின் போட்டோ, வீடியோவை வெளியிட்ட வாலிபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வாலிபர் சிரஞ்சீவியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 17 வயது சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வாலிபர் appeared first on Dinakaran.

Related Stories: