126 பவுன் நகை கொள்ளை தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

உளுந்தூர்பேட்டை, மார்ச் 22: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பார்த்தசாரதி என்பவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடைக்கு ரூ.65 லட்சம் மதிப்பிலான 126 பவுன் நகையை 2 பைகளில் எடுத்துக்கொண்டு தனியார் சொகுசு பேருந்தில் சென்றார். நேற்று முன்தினம் இரவு உளுந்தூர்பேட்டை அருகே ஒலையனூர் என்ற இடத்தில் வரும்போது நகைகள் கொள்ளை போனதாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீசார் 126 பவுன் நகை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு சென்ற பார்த்தசாரதி வரும் வழியில் நகை கொள்ளை போனதா? அல்லது உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூரில் டீக்கடையில் பேருந்து நிற்கும்போது கொள்ளை போனதா? என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் இரண்டு பைகளில் 126 பவுன் நகையை எடுத்து வந்த பார்த்தசாரதி அலட்சியமாக இருந்ததற்கு என்ன காரணம் என்றும், இவருடன் இதே பேருந்தில் வேறு யாராவது வந்து நகைகளை கொள்ளையடித்து சென்றார்களா அல்லது கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பின் தொடர்ந்து வந்து இந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சி பதிவுகள் மற்றும் செல்போன் தொடர்புகள் உள்ளிட்டவைகள் கொண்டு கோபிசெட்டிபாளையம் சென்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post 126 பவுன் நகை கொள்ளை தனிப்படை போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: