பைக் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை கண்முன்னே பிளஸ் 2 மாணவி பலி

சோழிங்கநல்லூர்: பைக் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை கண்முன்னே மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை புழல் கங்காதரன் 3வது தெருவைச் சேர்ந்தவர் தயாநிதி (50). இவர் மாதவரம் மண்டலம் 31வது வார்டில் சுகாதாரத் துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் ஜெயபாரதி (16). புழல் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில், தயாநிதி மற்றும் அவரது மகள் ஜெயபாரதி ஆகியோர் தச்சூர் கூட்ரோடு அருகே உள்ள ஆமித நல்லூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று காலை பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சோழவரம் அடுத்த ஆத்தூர் ஜிஎன்டி சாலை மேம்பாலம் அருகே வந்தபோது பின்னால் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லாரி எதிர்ப்பாராத விதமாக பைக் மீது மோதியது.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெயபாரதி, தந்தையின் கண் முன்னே லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் தயாநிதியின் இரண்டு கால்களும் நசுங்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த தயாநிதியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஜெயபாரதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாரத் ஷர்மா (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பைக் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை கண்முன்னே பிளஸ் 2 மாணவி பலி appeared first on Dinakaran.

Related Stories: