மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை தராத மோடிக்கு தமிழ்நாடு மீது உண்மையில் அக்கறை இல்லை: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் கேட்ட நிவாரண நிதியை விடுவிக்காத மோடி வாக்குக்காக தமிழ்நாட்டின் மீது அக்கறை இருப்பதாக காட்டி கொள்வதாக காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு அடிக்கடி செல்லும் பிரதமர் மோடிக்கு சில கேள்விகள். தமிழ்நாடு மீது மோடிக்கு உண்மையான அக்கறை கிடையாது. 2023 டிசம்பரில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டபோது மோடி ஏன் தமிழ்நாட்டுக்கு செல்லவில்லை? மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு பிறகு மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக ரூ.37,907 கோடி நிதி விடுவிக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டு மக்களின் தேவைக்காக முதல்வர் கேட்ட நிவாரண நிதியை தர ஏதும் திட்டம் உள்ளதா மோடி? மோடி தன் சேலம் பயணத்தின்போது, அங்கு மூடப்பட்டிருக்கும் ஏராளமான ஜவுளி தொழிற்சாலைகள், ஜவுளி உற்பத்தி இயந்திரங்கள் பழுதாகி இருப்பது, தொழிலாளர்களின் பணி நேரம் குறைக்கப்பட்டிருப்பது இதையெல்லாம் கவனிப்பார் என நம்புகிறேன். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, திட்டமிடப்படாத கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் இந்தியாவின் சிறு, குறு தொழில்துறைகளை ஒரே கையால் அழித்த பிரதமர் மோடி, இந்த ஜவுளி தொழிற்சாலைகளை மீட்க என்ன செய்ய போகிறார்?” என்று காட்டமாக சாடி உள்ளார்.

The post மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை தராத மோடிக்கு தமிழ்நாடு மீது உண்மையில் அக்கறை இல்லை: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: