நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரிக்கை

உத்தமபாளையம், மார்ச் 16: கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் தாலுகா பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், குச்சனூர், அனுமந்தன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ராமசாமி நாயக்கன் பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்கள் உள்ளன.

இதில் காமயகவுண்டன்பட்டி பகுதியில் தற்போது நெல் அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல் இன்னும் சில நாட்களில் அனைத்து பகுதிகளிலும் நெல் அறுவடைப் பணிகள் தொடங்க உள்ளன. குறிப்பாக கோகிலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, மார்க்கயன்கோட்டை, குச்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்த நிலையில் விவசாயிகள் கூறுகையில், “நெல் அறுவடை பணிகள் தீவிரம் அடையவுள்ள நிலையில், இந்தப் பகுதியில் தாமதமின்றி அரசு கொள்முதல் நிலையம் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நெல் மூட்டைகளுக்கு உடனடியாக கொள்முதல் தொகையை வழங்க வேண்டும்’’ என்றனர்.

The post நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: