ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம்

 

மதுராந்தகம், மார்ச் 11: மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் ஆனந்தவல்லி அம்பிகா உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமபிரானும், அகத்திய பெருமானும் வழிபட்ட கோயிலாக திகழ்ந்து வருவதாக புராணம், கல்வெட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று முன்தினம் மகா சிவராத்திரி விழா மிக விமரிசையாக நடைபெற்றது.

இந்நிலையில், இந்த கோயிலில் நேற்று காலை ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் அறங்காவலர் சிவராமன் ஆகியோர் பூரண கும்பம் மரியாதையுடன், மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, மூலவர் ஆபத்சகாயேஸ்வரருக்கு பால், தயிர், பழங்கள், இளநீர் ஆகியவற்றால் நடைபெற்ற அபிஷேகத்தை ஆளுநர் தரிசனம் செய்தார்.

இதனைத்தொடர்ந்து, மகா தீபாரதனை நடைபெற்றது. மேலும் கோயிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் முக்கிய விவரங்கள் அடங்கிய இணையதளத்தை ஆளுநர் துவக்கி வைத்து, அந்த இணையதளம் மூலம் கோயிலுக்கு நன்கொடை வழங்கினார். அங்கு கூடியிருந்த கிராம பொதுமக்களிடமும், பாஜ நிர்வாகிகளிடமும் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிராம மக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆளுநர் வருகையொட்டி கோயிலில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

The post ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: