அரிமளம் அருகே காமாட்சி அம்மன் கோயிலில் சிவன் ராத்திரி பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன்

 

திருமயம்,மார்ச் 9: அரிமளம் அருகே பாட்டையா குருபூஜை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குடம், காவடி நிகழ்ச்சியில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிவன் ராத்திரி, பாட்டையா குருபூஜை விழா கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடபட்டு வருகிறது. இதற்காக நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு அம்மன் கோயில் வளாகத்தில் மஹா கணபதி ஹோமம், சக்தி பூஜை, சந்தனகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று காலை அரிமளம் ஜெயவிளங்கி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், அழகு, மயில், பறவை காவடி எடுத்து அரிமளம் அக்ரஹாரம் வீதி, மீனாட்சிபுரம், ஏம்பல் சாலை வழியாக சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலை வந்தடைந்தனர். அப்போது வழி நெடுகிலும் பால்குடம், காவடி எடுத்துவரும் பகத்தர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் மேல தாளம் இசைக்க, அப்பகுதி இளைஞர்கள் ஆட்டம், பாட்டத்துடன் சென்றனர்.

இதனை தொடர்ந்து 1 மணிக்கு காமாட்சி அம்மன் கோயிலில் பாலாபிஷேகம், அன்னதானமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், பம்பை, வான வேடிக்கை நிகழ்ச்சியும் தொடர்ந்து காமாட்சி அம்மன் கரகம், அக்னி ஏந்தி வீதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் கலந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

The post அரிமளம் அருகே காமாட்சி அம்மன் கோயிலில் சிவன் ராத்திரி பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் appeared first on Dinakaran.

Related Stories: