வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: தேவரியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மக்கள், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் கோரிக்கை மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், தேவரியம்பாக்கம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக 50 குடும்பங்களை சேர்ந்த கிராம மக்கள் வீட்டு மனை பட்டா இன்றி ஏழ்மை நிலையில் வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்து வரும் அவர்களுக்கு சொந்தமாக வீடோ, வீட்டுமனையோ, மற்ற சொத்துக்களோ ஏதும் இல்லாமல், வீட்டுமனைகளை வாங்கிட போதிய வசதியும் இல்லாமல் உள்ளதாக கூறி, இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டுமென தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கிராம மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட தேவரியம்பாக்கத்தை சேர்ந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று நேரில் வந்து, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் கோரிக்கை மனு வழங்கினர். அப்போது, கோரிக்கை மனுக்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்த நிலையில், கிராம மக்கள் தேவரியம்பாக்கம் கிராமத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

The post வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: