அமைச்சர் பதவியை யாருக்கு கொடுப்பது? அப்பா பைத்தியம் சுவாமியிடம் உத்தரவு கேட்ட முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் 5வது அமைச்சர் பதவியை எப்போது நிரப்புவது, யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்று சேலம் அப்பா பைத்தியம் சுவாமியிடம் முதல்வர் ரங்கசாமி நேற்று உத்தரவு கேட்டார். புதுச்சேரியில் போக்குவரத்து துறை அமைச்சராக சந்திர பிரியங்கா இருந்து வந்தார். அவரை பதவி நீக்கம் செய்து 4 மாதம் கடந்த நிலையில் இன்னும் புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதல்வர் ரங்கசாமியே கவனித்து வருகிறார். இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. அதற்குள் முதல்வர் ரங்கசாமி புதிய அமைச்சரை நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், யாருக்கு அமைச்சர் பதவியை கொடுப்பது என்பதில் முதல்வருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சேலத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். பின்னர், சேலம் சூரமங்கலத்தில் உள்ள சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, சுவாமியிடம் அமைச்சர் பதவியை எப்போது நிரப்புவது, யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்று உத்தரவு கேட்டார். அதன் பிறகு, அங்கிருந்து நேற்று மாலை புதுச்சேரி வந்தார். இதனை தொடர்ந்து, புதிய அமைச்சரை முதல்வர் ரங்கசாமி விரைவில் நியமிப்பார் என்று என்ஆர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

The post அமைச்சர் பதவியை யாருக்கு கொடுப்பது? அப்பா பைத்தியம் சுவாமியிடம் உத்தரவு கேட்ட முதல்வர் ரங்கசாமி appeared first on Dinakaran.

Related Stories: