புளியந்தோப்பு பகுதியில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 4 பெண்கள் அதிரடி கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 4 பெண்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதியில் குட்கா விற்பனையில் பெண்கள் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவல்படி, பேசின்பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணித்தனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு பெண் பிடித்து போலீசார் விசாரித்தபோது சிறு, சிறு பொட்டலங்களாக குட்கா பொருட்கள் இருப்பது தெரிந்தது. அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தியதில், புளியந்தோப்பு காந்தி நகர் முதல் தெருவை சேர்ந்த சுதா (33) என்று தெரிந்தது. இவர் கொடுத்த தகவல்படி, காந்தி நகர் பகுதியை சேர்ந்த அம்மு (37), சாந்தி (60), சுருதி (33) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து 600 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து குட்காவை வாங்கிவந்து பேசின்பிரிட்ஜ், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர் என்று தெரிந்தது. இதையடுத்து 4 பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post புளியந்தோப்பு பகுதியில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 4 பெண்கள் அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: