பொள்ளாச்சி பாலியல் வழக்கு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது சிபிஐ: சேலம் சிறையில் உள்ள 9 பேர் ஓராண்டுக்கு பின் கோர்ட்டில் ஆஜர்

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019ம் ஆண்டு கல்லூரி மாணவிகள் உள்பட இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து பணம் பறித்தது தொடர்பாக, திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் கடந்த 2021ம் ஆண்டு குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

இந்நிலையில், கூடுதல் ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. ஒரு வருடமாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு 9 பேரும் ஆஜராகி வந்தனர். தற்போது, சேலம் சிறையில் உள்ள இவர்களை ஒரு வருடத்திற்கு பின் நேற்று 9 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில், குற்றவாளிகள் 9 பேர் முன்னிலையிலும் கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டது.

The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது சிபிஐ: சேலம் சிறையில் உள்ள 9 பேர் ஓராண்டுக்கு பின் கோர்ட்டில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: