மது கடத்தியவர்களிடம் லஞ்சம் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் அதிரடி மாற்றம்

புதுச்சேரி: மது கடத்தியவர்களிடம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி விழுப்புரம் எஸ்.பி தீபக்சிவாச் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்க மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கோட்டக்குப்பம் அருகே பெரிய முதலியார்சாவடியில் உள்ள மதுவிலக்கு சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்த சென்ைன நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக காரில் வந்த சென்னையை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அவர்களை திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த ராவுத்தன்குப்பத்தில் உள்ள மதுவிலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போகும் வழியிலேயே அவர்களிடம் பேரம்பேசி வழக்குபதிவு செய்யாமல் இருக்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நேற்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., தீபக்சிவாச் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் பணியாற்றிய போலீஸ் எஸ்.ஐ. விஸ்வநாதன், போலீஸ் ஏட்டுகள் நாகராஜ், புஷ்பராஜ், சுரோஷ் ஆகிய 4 பேரையும் அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ேமலும் அவர்கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

The post மது கடத்தியவர்களிடம் லஞ்சம் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: