ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை நிராகரிப்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரத்தில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க கோரி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், உரிய பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 15க்கு ஒத்திவைத்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அமைப்பு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் ”எங்களுக்கு அனைத்து வசதிகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தான் உள்ளது. 40கிமீ தூரத்திற்கு அப்பால் இருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தான் செல்ல வேண்டும் என்பது பயணிகள் உட்பட பார்சல்களை ஏற்றவும் சிரமமாக இருக்கும். அதனால் எங்களது கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள்” கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரத்தில் நாங்கள் எந்த விதத்திலும் தலையிட முடியாது. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஏப்ரல் 15ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, மனுதாரர்களின் கோரிக்கைகளை அங்கு முன்வைத்து நிவாரணம் கேட்கலாம்” என கூறி, தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்து உத்தரவிட்டனர்.

The post ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை நிராகரிப்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரத்தில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: