மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக மாநில முதல்வர் நேற்று தாக்கல் செய்த 2024-2025ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மேகதாது அணை கட்டப்படும்போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பினை அடையாளப்படுத்தும் பணி, வெட்டப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை ஆகியவை ஏற்கெனவே துவங்கப்பட்டுவிட்டதாகவும், தேவையான அனுமதி பெற்ற பின்பு இந்தப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் துவங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிப்பதோடு, தமிழ்நாட்டின் உரிமையினை பறிக்கும் செயலாகும். இது கடும் கண்டனத்திற்குரியது. மேகதாது அணை கட்டப்படாத நிலையிலேயே, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விடுவதில்லை. மாறாக, உபரி நீர் மட்டும்தான் தமிழ்நாட்டிற்கு வருகிறது. இந்த நிலையில், மேகதாது அணை கட்டப்பட்டால், வருகின்ற உபரி நீரும் வந்து சேராத நிலை உருவாகும். மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

எனவே, முதல்வர் மு.க. ஸ்டாலின், கர்நாடக முதல்வரிடம் மேகதாது அணை கட்டும் திட்டத்தினை கைவிட வலியுறுத்த வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கர்நாடக அரசினை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், இது குறித்து உச்ச நீதிமன்றம் மற்றும் ஒன்றிய அரசிடம் முறையிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: