திண்டுக்கல், பிப். 17: தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பழநி ஒன்றியம், தாமரைக்குளம் ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான மக்களை தேடி மருத்துவ திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான பராமரிப்பு நிதியுதவி திட்டம், சுயஉதவி குழுக்களின் கூட்டுறவு துறை கடன் தள்ளுபடி, 5 பவுன் வரை தங்க நகைக்கடன் தள்ளுபடி திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் படக்காட்சி காண்பிக்கப்பட்டது.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி ஆகியோர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாக புகைப்படங்கள் இடம் பெற்று பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்பட கண்காட்சியினை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
The post பழநி தாமரைக்குளத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி: ஏராளமானோர் பார்வையிட்டனர் appeared first on Dinakaran.