அரியலூரில் இணைய சேவை விழிப்புணர்வு பேரணி

 

அரியலூர்,பிப்.16: அரியலூரில் இணைய குற்றப் பிரிவு காவல் துறை சார்பில் இணைய சேவையை கவனமாக கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது. அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணி சின்னகடை தெரு, செந்துறை சாலை, ராஜாஜி நகர் வழியாகச் சென்று அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் கலந்து கொண்ட காவல் துறையினர் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் , மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் இணையதளத்தை கவனமாக கையாள்வோம், பண ஆசைக்கு மயங்க வேண்டாம், அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரக்கூடிய லிங்குகளை ஓபன் செய்ய வேண்டாம் , பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிடுவதை தவிர்ப்போம் என்பன உள்ளிட்ட வாசகங்களை அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனர்.

இந்நிகழ்வில், இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அந்தோணி ஆரி , மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரியலூரில் இணைய சேவை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: