புதிய பேருந்து நிலையம் அருகில் காவலர் நலசங்க கட்டிட திறப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையம் அருகில் ஓய்வுபெற்ற காவலர் நலசங்கத்தின் புதிய கட்டிடத்தை முன்னாள் காவல்துறை இயக்குனர் சேகர் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கான நலசங்கம் திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலையில் இயங்கி வந்தது. சங்கத்திற்கு சொந்த இடம் இல்லாததால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளிடம் சொந்த இடம் கேட்டு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதற்காக திருவள்ளூரைச் சேர்ந்த தொழிலதிபர் கிஷன்லால் தாமாக முன்வந்து தனக்குச் சொந்தமான புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரூ.40 லட்சம் மதிப்பிலான இடத்தை அன்பளிப்பாக அளித்தார். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலசங்கம் சார்பில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

செயலாளர் தாமரைக்கண்ணன், செயல் தலைவர் பலராமன், மனோகரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தை முன்னாள் காவல்துறை இயக்குனர் ஆர்.சேகர், சி.கே.காந்திராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விழாவில் முன்னாள் காவல்துறை இயக்குனர் காந்திராஜன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலசங்க கூட்டமைப்பின் தலைவர் வேலுச்சாமி, முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் கஜேந்திரகுமார், வரதராஜன் மற்றும் ஓய்வு பெற்ற காவலர் நல சங்கத்தின் நிர்வாகிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post புதிய பேருந்து நிலையம் அருகில் காவலர் நலசங்க கட்டிட திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: