அயோத்தி கோயில் நேரலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க மறுப்பு

புதுடெல்லி: பாஜவை சேர்ந்த வினோஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியை நேரலையாக தமிழ்நாட்டில் பொது இடங்கள் மற்றும் கோயில்களில் ஒளிபரப்புவதற்கு மாநில காவல்துறை தடை விதிக்கிறது.அதனால் இதுகுறித்த ஒரு உத்தரவை தமிழ்நாடு முதல்வர் மற்றும் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி,”இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எவ்வித தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மனுதாரரின் குற்றச்சாட்டில் எந்தவித முகாந்திரமும் இல்லை. இந்த மனுவானது அரசியல் உள்நோக்கம் கொண்டது. குறிப்பாக நேரலை செய்ய கேட்கப்படும் இடங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பாக இருந்ததால் தான் ஒரு சில பகுதியில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். என தெரிவித்தார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,” இந்த விவகாரத்தில் முறையாக அதிகாரிகளை அணுகி விண்ணப்பித்தால், அவர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்து நேரடி ஒளிப்பரப்பு செய்ய அனுமதிக்கலாம். இதனையும் நாங்கள் தற்போது உத்தரவாக பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள்,” விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post அயோத்தி கோயில் நேரலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: