டெல்லி அரசு பங்களாவை காலி செய்தார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா!


டெல்லி: நாடாளுமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ரா டெல்லியில் உள்ள அரசு பங்களாவை இன்று காலி செய்தார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான மஹூவா மொய்த்ரா அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் கடந்த டிசம்பர் மாதம் அவர் எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்யும்படி அரசு எஸ்டேட் இயக்குனரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

கடந்த 7ம் தேதிக்குள் காலி செய்யும்படியும் அவர் அறிவுறுத்தப்பட்டு இருந்தார். வீட்டை காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அரசு பங்களாவை காலி செய்யக்கோரியதை எதிர்த்து மஹூவா மொய்த்ரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நோட்டீஸை ரத்து செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

இதனிடையே மஹுவா மொய்த்ராவுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்ய குழு ஒன்றை எஸ்டேட் இயக்குநரகம் அனுப்பியதாகவும், அதைச் சுற்றியுள்ள பகுதி தடை செய்யப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் வருவதற்கு முன்பே வீடு காலி செய்யப்பட்டது; அதிகாரிகள் யாரையும் வெளியேற்றவில்லை என மஹுவா மொய்த்ராவின் வழக்கறிஞர் விளக்கம் தெரிவித்துள்ளார். வீட்டு சாவி எஸ்டேட் இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post டெல்லி அரசு பங்களாவை காலி செய்தார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா! appeared first on Dinakaran.

Related Stories: