பெண்களுடன் பேச வேண்டுமா? பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு உள்ளது என குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். வயது வாரியாக பல பெண்களின் செல்போன் எண்கள் இருப்பதாகவும் கூகுள்பே, பேடிஎம் மூலம் பணம் செலுத்தினால் செல்போன் எண்கள் அனுப்பப்படும் எனக் கூறி பெண்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.200 முதல் ரூ.500 வரை செல்போன் எண்கள் விற்கப்படுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வயதிற்கு ஏற்றார்போல் புகைப்படங்களுடன் பெண்களின் எண்கள் விலை வைத்து விற்கப்படுவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெண்கள் பேச ஆசைப்படுகிறார்கள் எனக் கூறி வலையை விரித்து பல ஆண்களிடம் செல்போன் எண்கள் விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது.
அவ்வாறு பெண்களின் செல்போன் நம்பரை ஒருவர் வாங்கும்போது, அவரோடு பேசும் வகையில் பல்வேறு குறுஞ்செய்திகள் அந்த நம்பரில் இருந்து வரும் வகையில் ஆண்களை அந்த மோசடி கும்பல் ஏமாற்றுகிறது. சிலர் அந்த எண்களுக்கு வீடியோ கால், ஆடியோ கால் மூலமாக பேச முற்படும்போது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்களை விற்பதும் அவர்கள் பேசாவிட்டால் வேறு எண்கள் தருகிறோம் இல்லையெனில் அந்த பெண்களை பேச வைப்பதாக தரகர் வேலை பார்ப்பதும் தெரிய வந்துள்ளது.
அவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்கள் விற்பனை செய்யப்பட்ட பிறகு சில மணி நேரம் பேசப்படுவதாகவும் அதன் பின்பு சுவிட்ச் ஆப் ஆகி விடுவதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சமூக வலைதளத்தின் மூலம் பெண்களின் எண்களை வாங்குவதற்கு ஆண்கள் தேடி வரும் வகையில் இந்த மோசடி கும்பல் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த வகை மோசடியில் சுய தொழில் மேற்கொள்ளும் பெண்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக டெய்லர் கடை, ஸ்பா பியூட்டி பார்லர் என பெண்கள் மட்டுமே கடைகள் மற்றும் அலுவலகம் வைத்து நடத்தும் தொழிலில், விளம்பரத்திற்காக கடை போர்டுகளில் உள்ள செல்போன் எண்களையும் இந்த கும்பல் திருடி ஆன்லைனில் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.
அவ்வாறு தொழில் மேற்கொள்ளும் பெண்களின் செல்போன் எண்களில் நட்பாக பேசி உல்லாசமாக பேசும் பெண்களை ஆசை வலையில் விழ வைத்து, அவர்கள் எண்களையும் விற்பனை செய்கின்றனர். இந்த விவகாரத்தில் சில அப்பாவி பெண்கள் மாட்டிக்கொண்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். இவ்வாறாக பெண்களின் செல்போன் எண்களை விற்பனை செய்யும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டெலிகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களை பட்டியலெடுத்து விற்பனை செய்யும் கும்பல்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சமூக வலைதள பக்கங்களுக்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதி தகவல்களை கேட்டுள்ளனர். எனவே ஆண்கள் இதுபோன்று பெண்களின் செல்போன் எண்களை வாங்கி ஏமாற வேண்டாம் எனவும், தொழில் மேற்கொள்ளும் பெண்கள் அதற்காக பயன்படுத்தப்படும் செல்போன் எண்களில் இது போன்று மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பு கொண்டால் உடனடியாக புகார் அளிக்குமாறும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post ‘பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு’ டெலிகிராம், இன்ஸ்டாவில் பதிவிட்டு நூதன மோசடி appeared first on Dinakaran.