அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சொரிமுத்து அய்யனார் கோயிலும் மூடப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு சோதனை சாவடியில் அனுமதியில்லை என்று வனத்துறை அறிவித்து இருந்தது. இதனால் அகஸ்தியர் அருவிக்கு குளிக்க வந்த ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் நேற்று (12ம் தேதி) மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் மழை காரணமாக பக்தர்கள் காரையாறு கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வனச்சரகர் சத்தியவேல் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று பாபநாசம் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்படாததால் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு மட்டும் பக்தர்கள் செல்வதற்கு வனத்துறையினரால் நேற்று திடீர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் அருவி மற்றும் காரையாறு ஆற்றில் குளிக்க தடை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வனச்சரகர் சத்தியவேல் வெளியிட்ட அறிவிப்பில், நேற்று (12ம் தேதி) அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் செல்வதற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென கோயிலுக்கு மட்டும் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியளித்தனர். இதனால் வெளியூர்களில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேற்று தடை என நினைத்து வராமல் இருந்தனர். வனத்துறையினர் அவசர கதியில் அறிக்கைகளை வெளியிட்டு பக்தர்களை குழப்பம் அடைய செய்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post பக்தர்களை குழப்பும் வனத்துறை; சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வதில் சிக்கல் appeared first on Dinakaran.