நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளான முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா, மேல் கவ்வட்டி, தேனாடுகம்பை ஆகிய பகுதிகளில் பல ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பூண்டு பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் ஊட்டி புறநகர் பகுதியான மேல் கவ்வட்டி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பூண்டு பயிர்கள் அனைத்தும் வேரோடு சாய்ந்தது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சாதாரணமாக மற்ற பயிர்களை காட்டிலும், பூண்டு பயிரிட முதலீட்டு செலவு அதிகம். இந்நிலையில், சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பூண்டு பயிர்கள் வேரோடு சாய்ந்து விட்டது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
The post ஊட்டியில் சூறாவளியுடன் மழை: பூண்டு பயிர்கள் வேரோடு சாய்ந்தது appeared first on Dinakaran.