சீனாவிடம் மண்டியிடமாட்டோம்: வங்கதேச வெளியுறவு அமைச்சர் பேட்டி

டாக்கா: சீனாவிடம் வங்கதேசம் மண்டியிடாது. எனவே இந்தியா கவலைப்பட தேவையில்லை என்று வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் கூறினார். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஷேக் ஹசீனா 5வது முறையாக மீண்டும் பிரதமராகிறார்.

இந்த வெற்றியை தொடர்ந்து வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் அளித்த பேட்டியில், ‘வங்கதேசத்தில் நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடந்தது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த போதிலும், மிகவும் நம்பகத்தன்மையுடன் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு முன் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

அரசியலில் வன்முறைக்கும் தீவிரவாதத்துக்கும் இடமில்லை. வங்கதேசத்தில் ஜனநாயகம் நிலையாக உள்ளது. மேற்கத்திய நாடுகளின் கருத்தை ஏற்க முடியாது. 12 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவுகள் ஏற்கனவே மிகவும் வலுவானவையாக உள்ளன. வங்கதேசத்தில் சீனாவின் ஆதிக்கம் இல்லை.

எங்களை பொறுத்தமட்டில் சீனா ஒரு பங்காளி நாடு. சீனாவிடமிருந்து எங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே பலன் கிடைக்கிறது. சீனாவைப் பற்றிய இந்தியாவின் அச்சம் நியாயமானது அல்ல. சீனாவிடம் வங்கதேசம் மண்டியிடாது. எனவே இந்தியா கவலைப்பட தேவையில்லை’ என்று கூறினார்.

The post சீனாவிடம் மண்டியிடமாட்டோம்: வங்கதேச வெளியுறவு அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: