அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டு புகார்: அதிபர் மாளிகையில் தஞ்சமடைந்த 2 எம்பிக்கள் கைது: போலந்து போலீஸ் அதிரடி

வார்சா: அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டு புகாருக்கு ஆளான இரு எம்பிக்கள், அதிபர் மாளிகையில் தஞ்சமடைந்திருந்த நிலையில், அவர்களை போலந்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். போலந்து நாட்டின் அதிபர் ஆண்ட்ரேஜ் டுடாவின் மாளிகையில், அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு ஆளான ஆளுங்கட்சியை ேசர்ந்த இரண்டு எம்பிக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.

அவர்களை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அவர்கள் அதிபர் மாளிகையில் தஞ்சமடைந்து இருந்ததால் உடனடியாக கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிரடியாக அதிபர் மாளிகைக்குள் புகுந்த போலீசார், குற்றம்சாட்டப்பட்ட எம்பிக்கள் கமின்ஸ்கி, வாசிக் ஆகிய இருவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இதுகுறித்து வார்சா காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவின்படி எம்பிக்களான முன்னாள் உள்துறை அமைச்சர் மரியஸ் கமின்ஸ்கி, முன்னாள் உள்துறை துணை அமைச்சர் மசீஜ் வாசிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்’ என்றனர். முன்னதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தலைமையிலான புதிய அரசுக்கும், முந்தைய ஆட்சியாளர்களுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது.

தேடப்பட்டு வந்த குற்றவாளிக்கு அதிபர் அடைக்கலம் கொடுத்திருப்பது, அதிபர் நாட்டின் நீதித்துறைக்கு சவால் விடுத்துள்ளார் என்று அந்நாட்டு பிரதமர் டஸ்க் கூறினார். அதிபர் மாளிகையில் தஞ்சமடைந்த இரு எம்பிக்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் போலந்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டு புகார்: அதிபர் மாளிகையில் தஞ்சமடைந்த 2 எம்பிக்கள் கைது: போலந்து போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: