இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலில் தட்டுவது தமிழ்நாட்டின் கதவைத்தான் : தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி

சென்னை : இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலில் தட்டுவது தமிழ்நாட்டின் கதவைத்தான் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் ஜன.7, 8ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகளின் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் என்விசன் என்ற பெயரில் நாட்டின் முதன்மை எரிசக்தி மாநாடு இன்று தொடங்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பாக 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜா, “ஐஐடி ஆராய்ச்சி பூங்கா, தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதில் அனைத்திலும் தமிழ்நாடு அரசு துணை நின்று வருகிறது. எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முதலில் வருவது தமிழ்நாட்டுக்குத்தான்.இதில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதெல்லாம் தேவையோ அவற்றை மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம். நீடித்த ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியதாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு இருக்கும்.உலக முதலீட்டாளர்கள் மாநாடு வளர்ச்சியின் உந்துதலாக அமையும்,”என்றார்.

The post இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலில் தட்டுவது தமிழ்நாட்டின் கதவைத்தான் : தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: