கரூருக்கு லாரியில் கடத்திய ₹12 லட்சம் குட்கா பறிமுதல்

ஓசூர், டிச.27: பெங்களூருவில் இருந்து கரூருக்கு, லாரியில் கடத்திய ₹12 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்த, ஓசூர் சிப்காட் போலீசார், டிரைவர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர். கிருஷணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட ஜூஜூவாடி சோதனை சாவடியில், நேற்று சிப்காட் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் லாரி டிரைவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் கரூர் மாவட்டம், சமத்துவபுரம் அருகே உள்ள வெள்ளியணையை சேர்ந்த சிவகுமார் (44), அதே பகுதியை சேர்ந்த ரவி (44) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, ₹11 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள 1,162 கிலோ குட்காவை லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் சிவகுமார், ரவி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post கரூருக்கு லாரியில் கடத்திய ₹12 லட்சம் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: