மயிலாடுதுறையில் போலீசை அரிவாளால் வெட்டிய வழக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான ரவுடி கைது

*14 ஆண்டுக்கு பின் மதுரையில் சிக்கினார்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை கால்டெக்ஸ் சந்திப்பு பகுதியில் கடந்த 2006ல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 5 பேரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது போலீசை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட முயன்ற 5 பேரையும் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்தனர். இதில் அவர்களிடமிருந்து அரிவால், ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பான வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 5வது நபராக சேர்க்கப்பட்ட பிரபல ரவுடி மணல்மேடு சங்கர் 2007ம் ஆண்டு போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறையை சேர்ந்த காந்தி, மதுரையை சேர்ந்த சுரேஷ், பால்ராஜ், கிருஷ்ணகுமார் ஆகிய 4 பேர் மட்டும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். இதில் கடந்த 2009ம் ஆண்டு முதல் கிருஷ்ணகுமார் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்றம் மூலம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட கிருஷ்ணகுமார், மதுரையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுரை சென்ற மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீசார், ரவுடி கிருஷ்ணகுமாரை கைது செய்து நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரவுடி கிருஷ்ணகுமார், கடந்த 14 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் கைது செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.

The post மயிலாடுதுறையில் போலீசை அரிவாளால் வெட்டிய வழக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: