சென்னை: வெள்ள நிவாரண நிதியை வங்கிக்கணக்கில் செலுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 3, 4ம் தேதிகளில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை கனமழையால் பெரும் சேதத்தை சந்தித்தது. இந்த வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிவாரண தொகையை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வெள்ள நிவாரண நிதியை வங்கிக்கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக அரசின் நிவாரண தொகை வழங்கக்கூடிய முடிவு பாராட்டக்கூடியது.
ஆனால் தமிழக அரசு நிவாரண நிதியை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பதால், அதிகளவில் முறைகேடு ஏற்படும். நியாயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. பல்வேறு திட்டங்களுக்கான தொகையை அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வரக்கூடிய நிலையில், நிவாரண நிதியையும் வங்கி கணக்கில் செலுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். வெள்ள நிவாரண நிதியை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் தமிழக அரசிற்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post மிக்ஜாம் புயல் பாதிப்பு: வெள்ள நிவாரண நிதியை வங்கிக்கணக்கில் செலுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..!! appeared first on Dinakaran.
