பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல்

ஊட்டி: பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பெரிய மற்றும் சிறிய புல் மைதானங்கள் மூடப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள பல்வேறு மலர் செடிகள், பெரணி மற்றும் கள்ளிச்செடிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இதுதவிர பூங்காவில் உள்ள அழகிய புல் மைதானங்களில் ஓடியாடி விளையாடி மகிழ்கின்றனர். இதற்காக பூங்காவில் உள்ள புல் மைதானங்களை பூங்கா ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சேறும் சகதியுமாக மாறியது. இதனால் பூங்கா மைதானத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து புல் மைதானங்களை பராமரிக்கும் பணியை தற்போது பூங்கா நிர்வாகம் தொடங்கி உள்ளது. இதற்காக பெரிய மற்றும் சிறிய புல் மைதானங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

The post பராமரிப்பு பணிகளுக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: