கொளத்தூர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (6.12.2023) கொளத்தூர் பகுதிகளில் ‘மிக்ஜாம்’ புயலினால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். பின்னர். ஓட்டேரி, நல்லான் கால்வாயில் நீர்வரத்தினை பார்வையிட்டார்.

தொடர்ந்து, குக்ஸ் சாலை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை படகுகளில் அனுப்பி வைத்தார்.பின்னர், அகரம் ஆனந்தன் பூங்கா, பாலாஜி நகர் பிரதான சாலை மற்றும் செல்வி நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அம்மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கினார்.

கொளத்தூர் பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு நீரை வெளியேற்றி, வெள்ளநீர் வடிந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்கிட வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக முதலமைச்சர் அவர்கள் இன்று காலை, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தரமணி. பாரதிநகர் மற்றும் துரைப்பாக்கம். கல்குட்டை பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும், நேப்பியார் பாலம் அருகில். கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் மழைநீர் சீராக வடிகிறதா என்பதையும் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் .பி.கே. சேகர் பாபு. பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்

The post கொளத்தூர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: