பெண் பார்த்தவுடன் உல்லாச சுற்றுலா தாலி கட்ட மறுத்த இன்ஜினியர் கைது

அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த 26 வயது பட்டதாரி பெண், பெங்களூரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் யோகேஷ் (28) என்பவருக்கு, புரோக்கர் மூலம் பெண் கேட்டு, கடந்த ஜூலை 2ம் தேதி தாய் ஜீவா (52), சின்ன சேலத்தை சேர்ந்த அவரது மாமா தமிழரசன் (39), அக்கா ஜெய (34) ஆகியோர் சென்றனர். அப்போது செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. திருமணம் செய்ய பெண் பார்த்து உறுதி செய்ததால் அந்த பெண் யோகேஷூடன் பழகி வந்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறிய யோகேஷ், கடந்த ஜூலை 6ம் தேதி முதல் அப்பெண்ணை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை உல்லாசம் அனுபவித்து, துணி, மோதிரம் வாங்க வேண்டும் என கூறி அந்த பெண்ணிடம் இருந்து ரூ.30 ஆயிரம் வரையிலும் பணமும் பெற்றுள்ளார். இதனிடையே யோகேஷிற்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்துள்ளது. இதை அறிந்த அப்பெண், நேரில் சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது, திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததுடன், யோகேஷ் மற்றும் ஜீவா, தமிழரசன், ஜெய ஆகியோர் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அரூர் பஸ் நிலையத்தில் யோகேஷ் நிற்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார், அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அரூர் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள யோகெஷின் தாயார், அக்கா மற்றும் மாமா ஆகிய 3பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பெண் பார்த்தவுடன் உல்லாச சுற்றுலா தாலி கட்ட மறுத்த இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: