கிட்டதட்ட 5 மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் சென்ற அவர், தற்போது தனது குழந்தைகளைச் சந்திப்பதற்காக இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய அவர், பிறகு எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவரது குழந்தைகளை பார்ப்பதற்காகவும் செல்லவில்லை, அவரது தந்தையின் வீட்டிற்கும் செல்லவில்லை என்பதால், அஞ்சு எங்கே? என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து போலீஸ் கூடுதல் எஸ்பி தீபக் சைனி கூறுகையில், ‘ராஜஸ்தான் மாநிலம் பிவாடிவியில் அஞ்சுவின் கணவர் அரவிந்தின் பாதுகாப்பில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் தனது மனைவியை சந்திக்க மறுத்துவிட்டார். அதனால் அந்த ஊரை சேர்ந்த மக்கள் அஞ்சுவை ஊருக்குள் நுழைய அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.
பதற்றத்தை தவிர்க்க கிராமத்தின் வாயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் அரவிந்தின் குடியிருப்பு பகுதிக்குள் எவரையும் நுழைய அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிவாடிக்கு அஞ்சு வந்தால் அவரிடம் விசாரணை நடத்தப்படும். தேவைப்பட்டால் அஞ்சுவை கைது செய்வோம்’ என்றார்.
அஞ்சுவின் கணவர் அரவிந்த் கூறுகையில், ‘அஞ்சுவும் நானும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை. இருவருக்கும் விவாகரத்து நடக்க மூன்று முதல் ஐந்து மாதங்கள் ஆகும். ஆனால் இந்தியாவுக்கு வருவதற்காக ஒரு மாத அனுமதி மட்டுமே பெற்றுள்ளார். எங்களுக்குள் விவாகரத்து முடிந்த பிறகுதான், அவரிடம் நான் குழந்தைகளை ஒப்படைக்க முடியும். அதுவரை எனது பாதுகாப்பில் தான் குழந்தைகள் இருக்கும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாகிஸ்தானை சேர்ந்த பேஸ்புக் நண்பரான நஸ்ருல்லாவைச் சந்திக்க பாகிஸ்தானுக்கு அஞ்சு சென்றுள்ளார். வடமேற்கு கைபர் பக்துன்க்வா வழியாக அங்கு சென்றுள்ளார். தற்போது வாகா எல்லை வழியாக இந்தியா திரும்பி உள்ளார். பஞ்சாப் போலீஸ் மற்றும் ஐபியின் உளவுத்துறை அமிர்தசரஸில் அவரிடம் விசாரணை நடத்தியது. அவர் டெல்லி அழைத்து செல்லப்பட்டார். பின்னர் எங்கு சென்றார் என்பது தெரியாது’ என்றார்.
* இந்தியா வந்த பாக். காதலி
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சச்சினுக்கும் பாகிஸ்தானை சேர்ந்தசீமா ஹைதருக்கும் ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் மூலம் எல்லை தாண்டிய காதல் ஏற்பட்டது. 4 குழந்தைகளுக்குத் தாயான 30 வயது சீமா, நேபாளம் வழியாக இந்தியாவிற்கு வந்தார். அவர் தன்னுடன் குழந்தைகளையும் அழைத்து வந்தார். அங்கே கோயில் ஒன்றில் ரகசிய திருமணம் முடித்த சீமா – சச்சின் ஜோடி, நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பேருந்து மூலமாக உத்தரபிரதேசம் வந்தது. தற்போது அவர்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர், பாகிஸ்தானை சேர்ந்த காதலனை தேடிச் சென்று விட்டு மீண்டும் இந்தியா திரும்பியது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
The post பேஸ்புக் காதலனை சந்திப்பதற்காக பாகிஸ்தான் சென்று திரும்பிய இந்திய பெண் மாயம்?: குழந்தைகளை பார்க்க வராததால் கணவர் பகீர் பேட்டி appeared first on Dinakaran.