தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 64 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்தனர். மேலும் அவர்களின் படகுகள், பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டித்தார். அதோடு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதி, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இலங்கை நீதிமன்றம் 64 தமிழக மீனவர்களில், 63 மீனவர்களை விடுதலை செய்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஒரு மீனவர் மட்டும் 2வது முறையாக கைதாகி இருப்பதாக கூறி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை சிறையில் அடைத்தனர். இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் 63 தமிழக மீனவர்களையும், தங்களுடைய பராமரிப்பில் வைத்து மருத்துவ பரிசோதனை, பாஸ்போர்ட், விசாக்கள் இல்லாததால் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கி, இந்தியாவிற்கு அனுப்புவதற்கான விமான டிக்கெட்கள் ஏற்பாடுகளையும் செய்தனர்.
இந்நிலையில் கடந்த 21ம் தேதி 15 மீனவர்கள், 22ம் தேதி 15 மீனவர்கள், 24ம் தேதி 12 மீனவர்கள் என 42 மீனவர்கள் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, அவர்களுடைய சொந்த ஊரான மண்டபம், ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்திய தூதரக பராமரிப்பில் இருந்த 21 தமிழக மீனவர்களும், கொழும்பிலிருந்து, சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் நேற்று அதிகாலை 4:15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களை தமிழ்நாடு அரசு சார்பில், மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இலங்கை சிறையிலிருந்து மீனவர்கள் 63 பேரும் தாயகம் திரும்பி வந்துள்ளனர்.
* போக்சோவில் மீனவர் கைது
இலங்கையில் இருந்து சென்னை திரும்பிய 21 மீனவர்களில், கார்த்திக் என்பவர் மீது, புதுக்கோட்டை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவாகியுள்ளது. அவர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதும் தெரிந்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவே சென்னை வந்து காத்திருந்தனர். மீன்வளத்துறை அதிகாரிகளிடம் விவரத்தை கூறி, கார்த்திக்கை தங்களுடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். மீன்வளத்துறை ஏற்பாடு செய்த வேனிலேயே கார்த்திக்கை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
The post இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 63 பேர் தாயகம் வந்தடைந்தனர்: நேற்று 21 பேர் வந்தனர்; அரசு சார்பில் வரவேற்பு appeared first on Dinakaran.
