எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த டெண்டர் முறைகேடு மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அளித்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,\\\\” இந்த விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது. மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக மீண்டும் புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை என்றும், அதேப்போன்று சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என கடந்த ஜூலை 18ம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க எடப்பாடி பழனிசாமி தடையாக இருந்தார் என லஞ்ச ஒழிப்புத்துறை உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: