ஆஸ்திரேலியாவுடன் 2வது டி20 இந்திய அணி 235 ரன் குவிப்பு

திருவனந்தபுரம்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன் குவித்தது. ஜெய்ஸ்வால், ருதுராஜ், இஷா அரை சதம் விளாசினர். கிரீன் ஃபீல்டு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. அந்த அணியில் பெஹரண்டார்ப், ஹார்டி நீக்கப்பட்டு ஆடம் ஸம்பா, கிளென் மேக்ஸ்வெல் இடம் பெற்றனர். இந்திய அணி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெயிக்வாட் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர்.

ருதுராஜ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிறிய ஜெய்ஸ்வால் ஆஸி. பந்துவீச்சை சிதறடித்தார். மேக்ஸ்வெல் வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரிகளைப் பறக்கவிட்ட அவர், அப்பாட் வீசிய 4வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, 2 சிக்சர் என 24 ரன் விளாசி மிரட்ட, இந்திய ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அடுத்து எல்லிஸ் வீசிய 6வது ஓவரை பதம் பார்த்த ஜெய்ஸ்வால் மீண்டும் ஹாட்ரிக் பவுண்டரியுடன் அரை சதத்தை நிறைவு செய்தார். ஜெய்ஸ்வால் 53 ரன் (25 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி எல்லிஸ் பந்துவீச்சில் ஸம்பா வசம் பிடிபட்டார். ருதுராஜ் – இஷான் ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 87 ரன் சேர்த்தது. இஷான் 52 ரன் (32 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), சூரியகுமார் 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

கடைசி கட்டத்தில் ரிங்கு சிங் ருத்ரதாண்டவமாட இந்திய ஸ்கோர் 200 ரன்னை கடந்தது. ருதுராஜ் 58 ரன் (43 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி எல்லிஸ் பந்துவீச்சில் டேவிட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன் குவித்தது. ரிங்கு சிங் 31 ரன் (9 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), திலக் வர்மா 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் நாதன் எல்லிஸ் 3, ஸ்டாய்னிஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட் இணைந்து துரத்தலை தொடங்கினர்.

The post ஆஸ்திரேலியாவுடன் 2வது டி20 இந்திய அணி 235 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: