காஞ்சிபுரம் செவிலிமேட்டில் கெங்கையம்மன், துலுக்கானத்தம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள கெங்கையம்மன், துலுக்கானத்தம்மன் கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் செவிலிமேடு அம்பேத்கர் நகரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் கெங்கையம்மன், துலுக்கானத்தம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில், விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் எனும் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது.

விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கோ பூஜை, தன பூஜை, ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை, மஹா பூர்ணாஹூதி நடத்தப்பட்டு, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாகம் முடிவுற்று, நான்காம் கால யாகமாக நவகிரஹ ஹோமம், மஹா பூர்ணாஹூதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடாகி மங்கள இசை, மேளத்தாள வாத்தியங்களுடன் சிவாச்சாரியார்கள், கோபுர விமானங்களுக்கு எடுத்துச்சென்று, கூடியிருந்த திரளான பக்தர்களின் விண்ணை முட்டும் `ஓம் சக்தி பரா சக்தி’, `ஓம் சக்தி பரா சக்தி’ என்ற பக்தி கரகோஷங்களுடன் பல்வேறு நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை, கோபுர கலசங்கள் மீது ஊற்றி, தீபாரதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் மூலவர் கெங்கையம்மன், துலுக்கானத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன், காங்கிரஸ் பிரமுகர் மதியழகன், பாஜ பிரமுகர் அதிசயம் குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post காஞ்சிபுரம் செவிலிமேட்டில் கெங்கையம்மன், துலுக்கானத்தம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: