அண்ணாநகர், சூளைமேடு பகுதிகளில் குடோன், பெட்டிக்கடைகளில் 325 கிலோ குட்கா பறிமுதல்: 4 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், சூளைமேடு, திருமங்கலம், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர் ஆகிய பகுதி களில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகைக்கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாகவும், குடோனில் பதுக்கி வைத்துஇருப்பதாகவும் வந்த தகவலையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அண்ணாநகர் 2வது அவென்யூவில் உள்ள பெட்டிக்கடையில குட்கா விற்பனை செய்வதாக அண்ணா நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோபாலகுரு தலைமையிலான போலீசார், பெட்டிகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் சென்னை அமைந்தகரை என்எஸ்.நகர் பகுதியை சேர்ந்த செல்வத்திரன் (42) என்பதும் அமைந்தகரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் எனக்கு தினமும் குட்கா சப்ளை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அவருக்கு சொந்தமான குடோனில் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குடோன் பூட்டை உடைத்து 280 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளுக்கு குட்கா சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து செல்வந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுபோல் சென்னை சூளைமேடு பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற சென்னை கோடம்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்த அண்ணன் முகமது (33) இவரது தம்பி தமிம்அன்சாரி (29) ஆகியோரை சூளைமேடு இன்ஸ்பெக்டர் பூபாலன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 45 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், 4 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post அண்ணாநகர், சூளைமேடு பகுதிகளில் குடோன், பெட்டிக்கடைகளில் 325 கிலோ குட்கா பறிமுதல்: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: